Jun 9, 2009

காயல் பாட்டி - சில நினைவுகள்


சென்ற வருடம் ஜுன்-8, 2008 (ஞாயிறு) என் அம்மா வழிப் பாட்டி இரவு சுமார் 7:30 க்கு இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது.....சில நினைவுகள்...

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

"காயல் பாட்டி" என்று என்போன்ற பேரன் பேத்திகளாலும், "அம்மை" என்று அவரது பிள்ளைகளாலும், "நாடாச்சி" என்று ஊரில் பெரும்பாலும் அறியப்பட்ட செல்லம்மாள் எனற எங்கள் பாட்டிக்கு வயது 89+. (அவரின் 'திருமண அழைப்பிதழ்' (6-12-1937) இன்னும் இருக்கிறது). இந்த வயதில் முழு வாழ்க்கைக்குப் பின் இயற்கையான மரணம் அதிர்ச்சி வகையில் சேராதுதான். இருந்தும், சமீபத்தில்தான் பழைய spirit-ல் பார்த்த பாட்டி மறைந்ததின் ஏற்றுக் கொள்ளமுடியாத்தன்மையும், சொந்தத்திலேயே காணப்பெற்ற ஒரு exemplary lady-யின் இழப்பும், காயல் என்ற கிரமத்தைப்பற்றி எனக்கிருந்த identity இல்லாமல் போனதும் என்னை ரொம்பவும் disturbed ஆக்கின ..............


இரண்டு வாரத்திற்கு முன்புதான் (மே, 2008) இந்தியா போயிருந்தபோது காயலில் பாட்டியைப் பார்க்கப்போயிருந்தேன். She was healthy, by all means. "எப்படி இருக்கீங்க பாட்டி?" என்றபோது, "என்னை விடுய்யா...அம்மா எப்படி இருக்கா?" எனற பதில்கேள்வி momentarily வந்தது. (அம்மா angioplasty செய்து மதுரை அப்போலோவில் இருந்த நேரம்). "மதிப்பிரகாசம் டாக்டர் மதுரைக்குப் போகச்சொல்லிட்டார்ன்னதும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்... " என்றவர் அடுத்தடுத்து பல கேள்விகள் கேட்டுக் கடைசியில் "அப்ப, மதிப்ப்ர்காசம் நம்ம குடும்ப டாக்டர்ங்கிறதாலே முன்கூட்டியே இத பண்ணா நல்லதுன்னு சொல்லி மதுரை போகச்சொன்னாரா....?" என்று விஷயத்தைக் 'கப்' பென்று பிடித்தார். சென்னையிலிருந்து ஜெயம் சித்தி வருவதாகச் சொன்னதும் "அது, இந்த வைகாசி ரெண்டாவது செவ்வாய்ல அவங்க ஊரிலே கொடை வரும்...அதுக்கு வருவா..." என்றார். Astonishing Memory!


பாட்டியின் நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட நிதானமான பார்வையும், எதையும் ஒரு புன்னகை கலந்து கையாளும் லாவகமும், சந்த்தேகத்திற்கு இடமில்லாத மிகக் கடின உழைப்பும் பற்றி எவ்வளவு பேசினாலும், பாட்டியை 10 சதவிகிதம் மட்டும் புரிநத்ததாகவே ஆகும். அந்தக்காலங்களில் பாட்டி அதிகாலையில் 'பனங்காட்டு'க்கு சென்று, "பனையேறி' என்ற பனைமரத்தொழிலாளி இறக்கித்தரும் 'பைனி'யை 'கூப்பனி' யாகக் காய்ச்சுகையில் நானும் போயிருக்கிறேன். உழைப்பை 'சாப்பிடுவது' மாதிரி ஏதோ உயிர் வாழ அத்தியாவசியம் போல் நினைத்திருந்த பாட்டி சில வருஷம் முன் தீபிகா வேலைக்குப் போவது பற்றி கேட்ட கேள்வி எனக்கு ஆச்சரியம்: "நீ மட்டும் சம்பாதிச்சா போதாதையா...? எதுக்கு அவளையும் வேலைக்கு அனுப்பனும்..??" நான் விடவில்லை; "என்ன பாட்டி, உங்க காலத்தில பணக்காடு, வயல்ன்னு நீங்க பண்ணாத வேலையில்லை. உங்க மூன்று பெண்களும் வேலையில் குறைஞ்சவங்க இல்லைன்னாலும் அவங்க வேலையெல்லாம் வீட்டுக்குள்ளேதான்... இப்போ எங்க generationa-ல தீபிகா மாதிரி வேலைக்குப் போறாங்க.... இதை நீங்க, நீங்க எப்படி பாட்டி கேள்வி கேட்கலாம்?" என்றேன், பாட்டியை மடக்கிவிட்டோம் என்ற தோரணையில். பாட்டியின் quintessential புன்னைகையுடன் சற்றும் தாமதியாமல் பதில் வந்தது: "நாங்கள்லாம் எங்க வீட்டு தோட்டத்தில, எங்க பனங்காட்டில, எங்க வயல்ல எங்க வேலையை செஞ்சோம்... இப்ப மாதிரி அடுத்தவன்கிட்ட கையைக்கட்டியா வேலை செஞ்சோம்??". Shrewd! தன் வயலில் தான் வேலை செய்வதைக் கௌரவமாக நினைத்திருந்த generation அது. (இப்போது washing machine-லிருந்து எடுத்த துணியைக் கொடியில் காயப்போடுவதற்கு வேலைக்காரி கிடைக்குமா என்று தேடுகிறோம்).


பாட்டியிடம் நான் மிகவும் வியந்தது, பாட்டிக்கும் தாத்தாவிற்கும் இடையேயான அன்றாட வாழ்வின் உரையாடல்களில் இருந்த ஒரு easiness. தாத்தாவானால் கலெக்டரைப் பார்க்கவும், மனு கொடுக்கவும் (எதுக்கு? ஊர்ப்பிரச்சனைக்குத்தான்...) சளைக்காதவர். பாட்டி தாத்தாவுக்கு 'ஆமாம் சாமி' போடும் தலையாட்டி பொம்மையாகவும் இல்லை; எதற்கெடுத்தாலும் மல்லுக்கு நிற்கும் புலம்பல் ரகமும் இல்லை. கேட்கவேண்டியதைக்கேட்டு, சொல்லவேண்டியதை சொல்லி... பாட்டி-தாத்தா exchanges எப்போதும் ஒரே அலைவரிசையில் இருந்தன எனலாம். முக்கியமாக, பாட்டிக்கும் தாத்தாவிற்கும் எல்லா விஷயங்களிலும் எப்போதும் communications இருந்தது, கருத்துக்களில் வேறுபாடு இருந்த போதும். தம்பதிகளிடையே இந்த ஒரே அலைவரிசை communication ரொம்ப முக்கியம் என்பது என் எண்ணம். Communication gap, misunderstanding -இதெல்லாம் பாட்டி-தாத்தாவிடம் பருப்பு வேகாத விஷயம்! வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் contribution to family என்று வரும்போது இருவரும் கிட்டத்தட்ட சமமாக இருந்ததும், ego என்ற வார்த்தை கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வாழ்க்கையைத் தொடங்கியதும், வாழ்ந்த காலத்தையும், வளர்ந்த கிராமத்துச சூழலையும் மீறின maturity மற்றும் broad outlook இருநததும், இருவருக்கும் இடையே நிலவிய ஒரு இயல்பான அன்னியோன்யமும் அதை சாக்கியமாக்கியிருக்கலாம். பாட்டியிடம் கண்டு, அவரது பிள்ளைகளிடமும், பேரன் பேத்திகளிடமும் (நான் உள்பட) காணமுடியாத 'கற்றுக்கொள்ளாததும், பெற்றுக்கொள்ளாததும்' என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் முதலில் வருவது இந்த தம்பதியர்க்கிடையேயான ஒரே அலைவரிசை communication தான். (இரண்டாவது: பேச்சில் சுருக்கமும் அதேசமயம் தெளிவும் இருப்பது; ambiguous-ஆக பேசத்தேரியாதது). Intellectual companionship, compatibility, personality-match, "IIn marriage, what I look for is a friend-yar!" என்றெல்லாம் fancy வார்த்தைகள் உலவும் இந்த நவீன உலகிலும், பாட்டி-தாத்தாவே என் ஆதர்ச தம்பதி.


பாட்டியிடம் மற்றுமொரு குறிப்பிடத்தக்க குணாதிசயம், அவருடன் பேசும்போது வயது வேறுபாடின்றி நாம் comfortable-ஆக feel பண்ணுவது. பொதுவாக வயதானவர்கள் துளைத்தெடுக்கும் கேள்விகளால் உங்களை நெளியவைப்பார்கள்; மேலோட்டமாக கண்களால் உங்களை அலசியபடிதான் பேச்சு தொடரும். ஆனால் காயல் பாட்டி அப்படியல்ல. அளவான, தெளிவான பேச்சினால் பேசுபவர்க்கு 'சட்' டென்று நம்பிக்கை மற்றும் intimacy வரவழைக்கும் ஒரு pleasing personality. வாணிஸ்ரீயும் தீபிகாவுமே உதாரணங்கள். பாட்டியின் மறைவு குறித்து வாணிஸ்ரீயின் அண்ணன் வசீகரன் அனுப்பியிருந்த மெயிலில்: "she is one with whom Vani had felt utmost confidence in your family... " என்றும், தீபிகா அவள் தோழிக்கு மெயிலில் " …she is one of the good hearted persons I have met in my life." என்று எழுதியிருந்தனர். தீபிகா, திருமதி. சுபாகர்-ஆன புதிதில் பாட்டியைப் பார்த்தபோது, "இதுகள் ரெண்டும் இப்படித் தனித்தனியா இருக்குதே...சேர்ந்து இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்..ன்னு நினைப்பேன்மா; ஆனா யார்கிட்டே சொல்றதுன்னு தெரியாது. இப்பதான் திருப்தியா இருக்கு..." என்று தீபிகாவிடம் தனியாகப் பேசும்போது சொன்னதில் உறவினர்களில் எல்லாரையும் விடத் தனித்து, உயர்ந்து நின்றார். (நிறைய பேர்க்கு நல்ல விஷயம் எதுவென்றாலும் அதுபற்றி வாய்திறந்து சொல்வதற்கு வார்த்தை கிடைப்பதில்லை). பாட்டி தான் எனக்குத்தெரிந்த, எங்கள் குடும்ப மற்றும் நண்ப வட்டாரங்களில் the most decent lady.


பாட்டிக்கும் அவரது இரண்டு சகோதரிகளுக்குமிடையான அன்பில், உரையாடலில் ஒரு நட்பு கலந்த பாசத்தைக் காண்கலாம். மூன்று தலைமுறை காலங்களிலும், மதவேறுபாட்டிலும், இன்னும் பல வேறுபாடுகளிலும் கலையாமல் இருந்தது அந்த சகோதரிகள் அன்பு. அந்த காலங்களில் குருத்துப்பாட்டி (பாட்டியின் தங்கை) மாலைவேளைகளில் 'பழக்கம் விடுவதெற்கேன்று' பாட்டியை சந்திக்க வருவதைப் பார்த்திருக்கிறேன். அந்த உரையாடல்கள் ஒருமாதம் முன் (மே 2008) குருத்துப்பாட்டி இறக்கும் வரை, பாட்டி அவரைப்பார்க்க தூத்துக்குடி வந்து அவருடன் பேசியதுவரை தொடர்ந்தன. இந்தமுறை (ஜூன் 2008) காயல் பாட்டி ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவரைப்பார்த்து நீண்டநேரம் உரையாடியவர் - பாட்டியின் இன்னொரு தங்கை 'கோவங்காட்டு பாட்டி'. அன்புச் சகோதரிகள்!


அன்றாட அவசரங்களில் உறவினர்களை நாம் miss பண்ணக்கூடாதென்பது பாட்டி-தாத்தா இருவரிடமும் நான் பொதுவாகக் கண்ட ஒரு குணம். சென்னையைத் தாண்டித்தான் நான் ஜப்பான் போவதால், "செயம் வீட்டுக்குப் போனியாயா?" என்ற கேள்வி எப்போதும் வரும். கடந்த பத்து வருடங்களாக "வாணி அம்மாவைப் பார்த்தியா?" என்ற கேள்வியும் தவறாமல் சேர்ந்துகொண்டது.......


"Health is the status of complete harmony of the body, mind and spirit" என்ற கூற்றின்படி, பாட்டியின் health ஒரு வரப்பிரசாதம் என்பேன். அயராத உழைப்பும், எளிமையான உணவும், அனாவசியமாக உணர்ச்சிவசப்படாததும், அதனாலேயே இயற்கையாக வந்த மேற்சொன்ன harmony-யும் healthy living-க்கான அடித்தளமாக இருந்தாலும், family history என்ற போர்வையில் பாட்டியை diabetes, அது, இது என்று துரத்தாததும் ஒரு அதிருஷ்டமே. But for some minor illness, for the most part she lived a healthy life. 10 வருடங்கள் முன்பு நான் ஜப்பானில் விபத்துக்கு அப்புறம் சென்னையில் இருந்தவேளையில் என்னைப்பார்க்க தாத்தாவும், பாட்டியும் ரயிலேறி வந்தபோது இருவருமே 80-க்கு அருகில்! மூன்றுவருஷம் முன்னால் கூட மதுரை வரை பயணித்து, மாடிப்படியேறி சித்தியைப் பார்க்க வந்திருந்தார், பாட்டி. இரண்டு வாரம் முன்பு பாட்டியைப் பார்க்கப்போயிருந்தபோது வீட்டில் யாருமில்லாமல் தனியாக இருந்தார். பெசிக்கொண்டேயிருந்தவர், மெதுவாக எழுந்து ஓரடி, இரண்டடி வைத்து நடக்க ஆரம்பித்தார், எந்த support-ம் இல்லாமல். நான் தடுக்காமல் ஒரு ஆர்வத்துடன் அவரைப் பார்க்க, அவர் நாலடி நடந்து shelf-ல் ஓலைப்பெட்டியிலிருந்து ஒரு 'நாட்டு வாழைப்பழ'த்தை எடுத்து எனக்குத் தந்தார்...


பாட்டி இன்னும் பத்து வருடங்கள் திடமாக இருப்பார் என்று நம்பியிருந்தேன்... கடைசிவரை நினைவு கொஞ்சமும் பிசகாமல், ஞாபகமறதி தொல்லையின்றி ("வைகாசி இரண்டாவது செவ்வாய் செயம் ஊரில கொடை") மிகத்தெளிவான பேச்சுடன் வாழ்ந்த பாட்டி, இங்கு ஜப்பானில் சாதரணமாக கண்ணில்படும் 90+ பாட்டிகளை மிஞ்சிவிட்டார்! (ஜப்பானில் பெரும்பாலான 90+ வயோதிகர்கள், கையில் ஒரு தள்ளுவண்டியைப் பிடித்துக்கொண்டே சாலையில், ரயிலில் போவது சகஜம் என்றாலும், அவர்களுக்கு ஞாபகமறதியும், தெரிந்தவர்களை recognize பண்ண இயலாமையும் உண்டு). ஒருவேளை நான் diabetes, cardiac, memory disorder என்று extra-baggage எதுவுமின்றி நீண்ட காலம் வாழநேர்ந்து 90-ஐத்தொட்டால், அதற்கு என் பாட்டியின் 'ஜீன்' தான் காரணம் என்று 2052-ல் (என் பொக்கை வாயால்) அடித்துச் சொல்வேன்!


காயலில் கடைசியாகப் பாட்டியைப் பார்த்தபோது, அவர் பக்கத்தில் ஒரு 'செல்'போன் இருந்தது. "என்ன பாட்டி, செல்போன் வச்சிருக்கீங்களா? ஜப்பான் போனதும் நான் பேசறேன்..." என்றேன். "அதுல பேசினா கொஞ்சம் கர, கரன்னு சரியா கேட்கலை..." என்றார். நான் நம்பவில்லை.


ஜப்பானில் இருந்து பாட்டியிடம் போனில் பேசவேண்டுமென்று நான் நினைத்தது நடக்கவில்லை. அதற்குப்பதில், பாட்டியின் பிரிவு பற்றிய செய்திதான் போனில் வந்தது.

0 comments:

Post a Comment