Mar 12, 2009

(இ)ராபர்ட் கிளைவ் 'சொக்'காரர்கள்!


தமிழ்நாட்டைத் தவிர எல்லா இடங்களிலும் அனேகமாக எல்லாரும் கூடுதலாக ஹிந்தியும் பேசுகிறார்கள். நாம் தான் ராபர்ட் கிளைவ் சொந்தக்காரர்கள் மாதிரி ஆங்கிலத்தை நாடுகிறோம். கழகக் கண்மணிகளால் நமக்கு விளைந்த கேடுகளில் முதலாவது, இது. (தலைப்பு விளக்கம் -"சொக்காரர்கள்" தூத்துக்குடிப் பக்கம் வழக்கில்
உள்ள, சில உறவுமுறைக்காரர்களை மட்டும் குறிக்கும் வார்த்தை. "சொந்தக்காரருக்கும்" "சொக்காரருக்கும்" வித்தியாசத்தை அடுத்தமுறை என் கஸின் தினகரைக் கேட்க வேண்டும்!)

ந்திராவில் பல வருஷங்களுக்கு முன் விஜயவாடா அருகில் கெமிக்கல் ரிஃபைனரீஸ் என்ற பெயரில் அரசாங்கம் யாரையோ, எதற்கோ ஏமாற்றிக் கட்டிக்கொண்டிருந்த ஹெவி வாட்டர் ப்ராஜெக்டில் ஒரு வருடம் இருந்தேன். ராஜு என்ற டிரைவரின் அன்பில், எள் என்றால் எண்ணெயாக வரும் அவன் ஆர்வத்தின் புண்ணியத்தில் எனக்கு தெலுங்கு கற்க அவசியமே ஏற்படவில்லை.

ஒரு நாள் விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனில் நள்ளிரவில் பாதித் தூக்கத்தில் நான் காத்திருக்கையில், என்னைப் போலவே பா.தூக்கத்தில் வந்த ஒருவர் என்னை எழுப்பி ‘நம, நம’ என்று ஏதோ கேட்டார். தூக்கக் கலக்கத்திலும், இது மாதிரி ஆட்களுக்கென்று தெலுங்கில் நான் தெரிந்து வைத்திருந்த ஒரே ஒரு வாக்கியத்தை எடுத்து விட்டேன்: "ஸாரி, தெலுகு ராதண்டி.... "(தெலுங்கு வராது). அவர் சட்டென்று தீயை மிதித்தவர் போல உணர்ந்து, கண்ணில் வியப்பு, அதிர்ச்சி எல்லாம் தெரிந்து "தெலுகு? அரே, ஹம் ஹிந்தி மே பாத் கர் ரஹா ஹை...." என்று அமைதியான அந்த நள்ளிரவிலும் கதறி, having had the shock of his life, பதிலுக்குக் காத்திராமல் ஏதோ முணங்கி விட்டுத் தலை தெறிக்க ஓடிப்போனார். அவர் முணகலுக்குப் பொருள் இப்படித்தான் இருக்க வேண்டும்: “படிச்சவன் மாதிரி இருக்கான்...தெலுங்கு தெரியாது என்கிறான்... ஹிந்தியும் தெரியலை. என்ன தான் தெரியுமோ!!”

சென்னை செண்ட்ரலில் வந்து இறங்கும் போதெல்லாம் ஆட்டோக்காரர்கள் என்னை 'ப்யாரு'டன் வரவேற்பார்கள் ”ஸாப், கஹாங் ஜாயேகே ஸாப்?” கட்டணமாக சொத்தில் பாதியைக் கேட்பார்கள் என்பதால் ஆட்டோவில் ஏறத் துணிவதில்லை. இருந்தும் பின் தொடரும் அந்த ”கஹாங் ஜாயேகே ஸாப்”-ஐ ரசிப்பேன். ஏன் குறிப்பாக என்னைப் பார்த்து அந்த ஹிந்திப் பிரயோகம், பின்னால் கூடவே வரும் தீபிகாவிடம் ஹிந்தியில் கேட்பதில்லை என்று விளக்கினால் தீபிகா கோபித்துக் கொள்வாள்.

சென்னையைத் தாண்டினால் -செண்ட்ரலைத் தாண்டினாலே- சர்வம் தமிழ் மயம் தான். ஆனால் சென்ற வருடம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டத்தில் நின்றபோது "அர்ச்சனை, அர்ச்சனை பண்றவாள்லாம் முன்னாடி வாங்கோ...."என்று சொல்லிக்கொண்டிருந்த பூசாரி (அல்லது பூசாரி மாதிரி இருந்த) ஒருவர் என்னைப் பார்த்ததும் குரலை மாற்றி, "ஸாப், அந்தர் ஜாயேகே ஸாப்? அந்தர் ஜானா சஹேங்கே?’ அன்று ஆசையாகக் கேட்டார். ”நான் இந்த ஊரு தான்ங்க, எங்கிட்ட தமிழிலேயே பேசலாம்” என்றதும் என்னைத் துறந்து, மற்ற கஸ்டமர்களை நாடிப்போனார்.

துரை ஏர்போர்ட்டில் வாசலில் 'கரு, கரு'வென்று -திருநெல்வேலிக்காரர் போல- செக்யூரிட்டி ஆபீஸர் என் டிக்கட்டைப் பார்த்ததும் "சென்னை ஜாயேகே ஸாப்?" என்றார். “ஸார், நான் தூத்துக்குடிக்காரன்; எனக்கு தமிழ் நல்லாவே தெரியும்" என்று நட்பாக சிரித்தேன். அவர் சிரிக்கவில்லை.
நம்பாதவர் மாதிரி நட்பில்லாமல் என்னைப் பார்த்தார். "திருநெல்வேலிக்காரர்கள்! ம்...!" என்று நினைத்துக்கொண்டே உள்ளே சென்றேன். திடீரென்று உள்ளே வந்தவர், என் கைப் பையைக் காட்டி மறுபடியும் ஹிந்தியில் ஏதோ சொல்ல, நான் உஷாராகி "இங்கே பாருங்க, முதல்லே, எனக்குத் தமிழ் தெரியும். இரண்டாவது, எனக்கு ஹிந்தி கொஞ்சம் கூடத் தெரியாது” என்றேன். அந்தத் 'திருநெல்வேலிக்காரர்' என்னிடம் நிதானமாக, பாவப்பட்ட குரலில் கெஞ்சுவது போல் சொன்னார்: "ஸாப், ஹம் மஹாராஷ்டிரா ஸே...ஸாப். முஜே தமில் பில்குல் பதா நஹி..."

4 comments:

Anonymous said...

ஆடாதடா ஆடாதடா மனிதா!!!

Deepika's Subahar said...

ஆட்டுவித்தால் ஆரொருவர், ஆடாதாரோ கண்ணா (கண்ணே..!) :-)

Anonymous said...

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே...

Udanx said...

உங்களுடைய இந்த கட்டுரை படித்த பிறகு காந்திக்ரமில் நான் இயற்பியல் படிக்கும்பொழுது எனது விரிவுரையாளர் ஒருவர் சொன்னது ஏன் ஞாபகத்திற்கு வந்தது "தமிழே தகராறு இங்கிலீஷ் தெரியாது ஹிந்தி பிடிக்காதுசென்னைக்கு அடுத்த ஸ்டேஷன் போக கூட உங்களால முடியாது" என்று சொல்வார் அது முற்றிலும் உண்மை. எனது வகுப்பில் மடித்த பல மாணவர்கள் ஹிந்தி தெரியாது என்ற ஒரே காரணத்திற்காக பாம்பே வர மறுத்தனர். அதனால் அவர்கள் வாழ்கை சீரழிந்து விட்டது என்று சொல்ல வரவில்லை. கடவுள் புண்ணியத்தால் அவர்கள் நன்றாக இருகிறார்கள். அனால் பாம்பே அல்லது வடக்கே சென்று இருந்தால் அவர்கள் வாழ்கை இன்னும் நன்றாக அமைந்து இருக்கலாம்.

Post a Comment